Monday, March 2, 2020

கடும் சிரமேற்கொண்டு ஆலயங்களுக்கு செல்வது பைத்தியக்காரத்தனமா?

அருமையான விளக்கம் /தெளிவு (எனக்கு) அளித்த மீள் பதிவு 💝💝💝💝



வெள்ளியங்கிரி போய்விட்டு திரும்பியிருந்தேன்.நண்பர் ஒருவர் நான் பகிர்ந்திருந்த புகைப்படத்தையெல்லாம் பார்த்துவிட்டு கேட்டார் ஏன் சிவன் அந்த மலையில் மட்டும்தான்...அதுவும் மலையுச்சியில் தான் இருக்கிறாரா?

அவரைப் பார்க்க அவ்வளவு சிரமப்பட்டு ஏழுமலை தாண்டி போய்தான் பார்க்கனுமா?அப்படி பார்த்தால்தான் அருள் தருவாரா?

பாரும் விண்ணும் எங்குமாய்ப் பரந்த இப்பராபரம் 
ஊருநாடு காடுதேடி உழன்றுதேடும் ஊமைகாள் 
நேரதாக உம்முளே அறிந்துணர்ந்து நில்லுமே
அப்பிடினு சிவவாக்கியர் சொல்லியிருக்காரே..

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே‘
...அப்படினு திருமூலர் சொல்லியிருக்காரே...

உனக்குள்ள சிவனை தேடுறத விட்டுட்டு.....
என்னய்யா ....இவ்வளவு படிச்சிருக்க நீயே இப்படி உடம்பை வருத்தி மலையேறி சிவனை பார்க்க போனேன்னு சொல்லுறயே...இப்படி இருந்தா எப்படி?என்றார் வினயமாக....

அவர் கேள்வியும் சரியாகத்தானே தெரிகிறது.....
ஆனால் ஏதோ ஒன்று குறைந்தது....பட்டென்று நான் கேட்டேன்...இவ்வளவு துல்லியமாக இறைவன் உடலினுள்ளே ....உள்ளத்துள்ளே...பாலில் நெய் கலந்தவாறு...கலந்துள்ளான் என்று பேசும் நீங்கள் உங்கள் உடம்பினுள்ளே உறுபொருளை கண்டுவிட்டீரா?என்றேன்.

அவர் திகைத்தார்.இல்லையென்று ஒப்புக்கொண்டார்.நான் தொடர்ந்தேன்...உடலினுள்ளே உறுபொருள் காண்பதற்கெல்லாம் இந்த மலையுச்சியை அடைய தேவைப்படும் சிரத்தையை விட பன்மடங்கு சிரத்தை வேண்டும்.

என்னை வாதத்தில் வெல்ல திருமூலரையும்,சிவவாக்கியரையும் அழைக்க வேண்டியதில்லை.நானே ஒப்புக் கொள்கிறேன்.இந்த மலையேற்றம் பைத்தியக்காரத்தனம் தான்.ஆனால் இந்த பைத்தியக்காரத்தனம் தரும் ஆன்மீக அனுபவம் அலாதியானது.

என்னைப் பொருத்தவரை அறிவாளிகளை விட பைத்தியக்காரர்கள் ஆண்டவனுக்கு சற்று நெருக்கமாக இருக்கிறார்கள் என்றேன்.

இறைவன் எப்போதும் வெளிப்படையாகவே உள்ளான்..அவன் உள்ளுக்குள் சதா காட்சியளித்துக் கொண்டுதான் உள்ளான்.அவனை காண்பதற்கு தடையே நான் தான்.நான் எனும் ஆணவம் தான்.மலையேற்றத்தின் தொடக்கத்தில் என் நான்(ஆணவம்)மலையைவிட பெரிதாக இருக்கும்.மலையேற மலையேற அந்த நான் சுருங்குவதை காணலாம்.

ஒவ்வொரு மலையாக கடக்கும் போதும் அனுமனது வாலைப் போல் இம்மலை நீள்வதாக பிரமை ஏற்படும்.ஒருசமயம் வரும் இதற்கு மேல் ஒரு அடி எடுத்து வைக்கமுடியாதென்று தோன்றும்.அப்போது கீழேயும் போக தெம்பிருக்காது.மேலேயும் போக இயலாது.அப்போது உள்ளம் கிடந்து அலறும் என்னை எப்படியாவது உன்னை தரிசிக்க வை.உன்னை நம்பியே வந்திருக்கிறேனென்று கெஞ்சும்..உன்னை அடைய நீயே சக்தி கொடு என்று இறைஞ்சும்... உள்ளத்து உறுதி உடையும்.கண்ணீர் வழிந்தோடும்.அப்போது இந்த மனமானதுஆற்றேன் எம் ஐயா..அரணே ஓ ..என்று போற்றி புகழும்...கதறி அழும்....

பிறகு உள்ளுக்குள் திடீரென்று ஒரு வைராக்கியம் பிறக்கும்..சக்தியும் பிறக்கும்...எப்படி போய் சேர்வோம்.என்று தெரியாது.இன்னும் நூறடி தூரத்தில் அவன் இருக்குமிடம் தெரியும் போது..காதலி பயணிக்கும் பேருந்துக்காக மணிக்கணக்கில் காத்திருந்த பாரமெல்லாம் ஜன்னலோரம் அவள் உதிர்த்துவிட்ட சிறு புன்னகையில் மாயமாவதை போல் நடந்த களைப்பெல்லாம் மாயமாவதை உணர்வோம்.உச்சியை அடைந்த அந்த ஒரு கணம்.....ஆம் அந்த ஒரு கணம்....'எனக்குள் நீ உனக்குள் நான் இருக்குமாறு தெங்ஙனே என்ற சிவாக்கியம் மெய்யாவதை காணலாம்.

மேலும் மூலிகை வாசம்,சில்லென்ற காற்று,மேகத்தின் ஊடே பயணம்,மேகத்திற்கும் மேலே பயணம்,இரவு காடு தரும் திகில்......,இப்படி உபரி மகிழ்ச்சிகளுக்காகவும் வருடந்தோறும் பயணிக்கிறேன்.
(இது என் பயண அனுபவம் மட்டுமே)

-அவனருளால் அவன்தாள் வணங்கி

Tuesday, January 28, 2020

மனிதம்....

சாதி மத பேதம் கடந்து அனைவரும் சிந்திக்க வேண்டிய பதிவு......

1) அர்ச்சகர் பூஜை செய்யும் போது வழுக்கி விழுந்து மரணம்.

2) துப்புரவு தொழிலாளி பாதாள சாக்கடையில் விஷ வாயு தாக்கி மரணம்.

இந்த இரண்டு செய்தியையும் படிக்கும் போது நம் மூளை எப்படி மதிப்பிடுதுனு ஒரு சுயபரிசோதனை செஞ்சுட்டு இந்த பதிவ படிங்க.

¶¶

நாமக்கல் கோவில் 

ஆஞ்சிநேயர் சிலைக்கு பூஜை செய்யும் போது எட்டடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து அர்ச்சகர் வெங்கடேசன் என்பவர் உயிர் இழக்கிறார். 

உடனே அவருக்கு முதல்வர் அவர் குடும்பத்துக்கு 5 லட்சம் நிதி உதவி கொடுக்கிறார்கள். 

ஊடகங்கள் எல்லாம் அதை மிகப்பெரிய செய்தியாக்கி பரப்பரப்பாக்குகின்றன. 

மக்கள் அர்ச்சகருக்கு நிதி கொடுக்கிறார்கள். 

ஒரே நாளில் 15 லட்சம் நிதி குவிந்ததாக விகடன் செய்தி வெளியிடுகிறது. 

இன்றைய செய்தியில் அந்த அனுமர் சிலையில் வருங்கால அர்ச்சகர்கள் பாதுகாப்பாய் பூஜை செய்ய ப்ளாட்பார்மும் அதற்கு பாதுகாப்பு கைப்பிடியும் வைக்கப்பட்டதாக படித்தேன்.

ஆஞ்சிநேயர் - துளசி மாலை - அர்ச்சகர் - மரணம் என்ற உடன் எவ்வளவு சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்கள் பாருங்கள்.

1. அந்த செய்தி மக்கள் மனதில் படிகிறது.

2. அந்த செய்தி மக்களை வருத்தப்பட வைக்கிறது.

3. அந்த செய்தியை ஒட்டி மக்கள் நிதி அனுப்புகிறார்கள்.

4. அரசாங்கம் நிதி கொடுக்கிறது.

5. அரசு இயந்திரம் வேகமாக இயங்கி அதை சரி செய்து கொடுக்கிறது. 

ஒரே ஒரு அர்ச்சகரின் உயிருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

கொடுக்கட்டும். அது மனித நேய செயல்தான். உயிரைப் பொறுத்தவரை ஒரு உயிரும் ஒராயிரம் உயிரும் ஒன்றுதான். அவருக்கு செய்தது பற்றி குறை சொல்லவில்லை.

ஆனால் நாட்டில் வருடத்துக்கு சராசரியாக 1300 இந்தியர்கள் மலக்குழியில் இறங்கி பாதாள சாக்கடையில் இறங்கி விஷக்காற்று பட்டு இறந்து போகிறார்கள்.

அவர்களுக்கு உடனே அரசாங்கம் குறைந்தபட்சம் பத்து லட்சமாவது பணம் கொடுக்க வேண்டும். ஆனால் கொடுக்காது. 

மக்களாகிய நாம் பாதாள சாக்கடை சுத்தம் செய்பவர்களின் மரணத்தை கண்டுகொள்ள மாட்டோம்.

1. அந்த செய்தி மக்கள் மனதில் படியாது

2. அந்த செய்தி மக்களை வருத்தப்பட வைக்காது.

3. அந்த செய்தியை ஒட்டி மக்கள் ஒரு பைசா நிதி அனுப்பமாட்டார்கள்.

4. அரசாங்கம் நிதி கொடுக்காது.

5. அரசு இயந்திரம் வேகமாக இயங்கி வருங்காலத்தில் அது நடக்காதது மாதிரி எதுவும் செய்து கொடுக்காது.

இத்தனைக்கும் பாதாள சாக்கடை அடைப்பு எடுப்பது என்பது சமூகத்துக்கு மிக மிக அவசியமான சேவையாகும். சட்டப்படி அதை செய்ய கூடாது. அதை செய்ய வைக்க கூடாது. ஆனாலும் வேறு வழியில்லை என்று நாம் அனைவரும் அந்த விதியை தளர்த்தி ஊரில் யார் இளிச்சவாய் மனிதனோ அவரை இறக்குகிறோம்.

எவ்வளவு பக்காவாக க்ரைம் செய்கிறோம் பாருங்கள். இதில் ஒன்று கூட நம் மனதை உறுத்தாது.

ஆனால் அர்ச்சகர் ஆஞ்சிநேயருக்கு துளசி மாலை போடும் போது கீழே விழுந்து இறந்தால் முதல்வரில் இருந்து மொத்த சமூகமும் இரங்கும், கொதிக்கும், அவருக்கான நட்ட ஈடை நிதியாக வசூலித்துக் கொடுக்கும்.

ஒரு மனிதனுடைய உயிரும் இன்னொரு மனிதனுடைய உயிரும் ஒன்றில்லை என்றாகிவிடுவது பற்றி நமக்கு எந்த குற்ற உணர்வும் இல்லை.

அன்றாட வாழ்க்கையில் நீங்களும் நானும் எவ்வளவு பெரிய குற்றங்களை சுரணையே இல்லாமல் செய்து கொண்டிருக்கிறோம் கவனியுங்கள்.

அந்த சுரணையற்றதன்மையின் பின்னால் இருக்கும் உளவியலை தைரியமாக உற்று கவனியுங்கள்... 

சமயம் கிடைக்கும் போதெல்லாம் கவனியுங்கள்.

இந்திய சாதி சமூக அமைப்பை நன்றாக புரிந்து கொள்ளலாம்....

©Vijay Bhaskarvijay

Thursday, April 21, 2016

சந்தோஷம் எங்கே உள்ளது.....

மனைவியை சந்தோஷமாக வைத்திருக்கப் போராடும் அன்பார்ந்த கணவன்மார்களும், எங்கு தொலைத்தோம் சந்தோஷத்தை என்று தெரியாமல் தேடும் மனைவிமார்களுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.
 
பிரெஸ்னோ பசிபிக் பல்கலைக்கழகத்தில் ஒரு சொற்பொழிவாளர் கூட்டத்தில் ஒரு தம்பதியரில் உள்ள பெண்மணியை பார்த்துக் கேட்டார்.

"உங்கள் கணவர் உங்களை சந்தோஷமாகப் பார்த்து கொள்கிறாரா?"

அருகிலிருந்த கணவர் நிமிர்ந்து, நம்பிக்கையுடன் அமர்ந்தார். காரணம், மனைவி அவரிடம் எந்த புகாரும் சொன்னதே இல்லை.  அவர் சந்தோஷமாகவே இருந்தார்.  

ஆனால், அந்த மனைவி தெளிவாக "இல்லை, என் கணவர் என்னை சந்தோஷமாக வைத்துக் கொள்ளவில்லை" என்றார்.  கணவர் அதிர்ந்தார்.  ஆனால், மனைவி தொடர்ந்தார்.  

"என் கணவர் என்னை சந்தோஷமாக வைத்திருக்கவில்லை.  என்னை சந்தோஷப்படுத்தியதும் இல்லை.  ஆனால், நான் சந்தோஷமாக இருக்கிறேன்.  நான் சந்தோஷமாக இருப்பது என்பது அவரை சார்ந்தது இல்லை.  என்னையேச் சார்ந்தது.  நான் சந்தோஷமாக இருக்கிறேனா என்பது நான் சம்பந்தப்பட்ட விஷயம்."  

"வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சந்தோஷமாக இருப்பது என்பது என் முடிவு.  அடுத்தவரால் நான் சந்தோஷமாக இருப்பேன் என்றால், இன்ன பொருளால் நான் சந்தோஷமாக இருப்பேன் என்றால், இன்னின்ன தருணங்களில் நான் சந்தோஷமாக இருப்பேனென்றால், நான் பெரும் பிரச்சனையில் இருக்கிறேன் என்று பொருள்."  

"நம்மைச் சுற்றியுள்ள எல்லாம் மாறிக் கொண்டே இருக்கின்றன.  மனிதர்கள், செல்வங்கள், என் உடல், தட்பவெப்பம், என் முதலாளி, சந்தோஷங்கள், நண்பர்கள், எனது உடல் மற்றும் மன ஆரோக்கியம் எல்லாமே.  இது ஒரு நீண்ட பட்டியல்."  

"என்ன ஆனாலும் சந்தோஷமாக இருப்பது என்பது நான் எடுத்த முடிவு.   நிறைய இருந்தாலோ, குறைவாக இருந்தாலோ என் சந்தோஷம் குறைவதில்லை.  வெளியே சென்றாலோ, வீட்டில் இருந்தாலோ, ஏழையாக இருந்தாலோ, பணக்காரியாக இருந்தாலோ என் சந்தோஷம் குறைவதில்லை."

"திருமணத்துக்கு முன்னும் சந்தோஷமாகத் தான் இருந்தேன், பின்னும் சந்தோஷமாகவே இருக்கிறேன்.  என்னை பற்றி எனக்கே சந்தோஷமாக இருப்பதால் சந்தோஷமாக இருக்கிறேன்."  

"என் வாழ்க்கையை நான் விரும்பக் காரணம் என் வாழ்க்கை மற்றவர்களதை விட சுலபமானதாக இருப்பதால் அல்ல.  நான் தனிப்பட்ட முறையில் சந்தோஷமாக இருப்பது என்று தீர்மானித்திருப்பதால்.  நானே என் சந்தோஷத்துக்கு பொறுப்பு."   

"இதை நான் ஒரு தீர்மானமாக மனதில் கொள்ளும் போது, என்னைச் சுமக்கும் பொறுப்பை மற்றவர்களிடமிருந்து நீக்குகிறேன்.  இது அனைவரது வாழ்க்கையையும் எளிதாக்குகிறது.  அதனால் தான், எங்கள் திருமண வாழ்க்கை இத்தனை ஆண்டுகளாக சந்தோஷமாக இருந்து வருகிறது" என்றார்.  

கைதட்டல் ஓயவே இல்லை.  

உங்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ளும் பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்காதீர்கள்.  வெயிலோ, மழையோ, உடல் சரியில்லையா, பணமில்லையோ, காயப்பட்டிருந்தாலோ, விரும்பப்படவில்லையோ உங்கள் மனதில் உள்ள சந்தோஷத்தை விட்டுக் கொடுக்காதீர்கள்.  உங்களை நீங்கள் மனதார மதிக்கும் வரை உங்களுக்குள் நீங்களே சந்தோஷப்பட்டுக் கொள்ளுவீர்கள்.  சந்தோஷம் உள்ளே உள்ளது.  வெளியில் இல்லவே இல்லை.


பகிர்வு.

Tuesday, April 19, 2016

இதுதான் வாழ்க்கை...

ஒரு கிராமம்.

சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடிக் கொண்டு இருக்கிறான்.

அப்போது, “என்னை காப்பாற்று, காப்பாற்று“ என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில், வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாக கதறுகிறது.

’மாட்டேன். உன்னை விடுவித்தால் என்னை விழுங்கி விடுவாய். காப்பாற்ற மாட்டேன்’ என மறுக்கிறான் சிறுவன்.

ஆனால் முதலை, “நான் உன்னை சத்தியமாகச் சாப்பிட மாட்டேன். என்னை காப்பாற்று” என்று கண்ணீர் விடுகிறது.

முதலையின் பேச்சை நம்பி, சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான். அறுத்து முடிப்பதற்குள், சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது .

”பாவி முதலையே இது நியாயமா? என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க,

“அதற்கென்ன செய்வது, பசி வந்தால் பத்தும் பறந்துவிடும். இதுதான் உலகம். இதுதான் வாழ்க்கை” என்று சொல்லிவிட்டு விழுங்க ஆரம்பித்தது முதலை.

சிறுவனுக்கு சாவது பற்றிக்கூட கவலை இல்லை. முதலை ஏமாற்றி விட்டதோடு மட்டும் அல்லாமல், நன்றிகெட்டதனத்தை, ’இதுதான் உலகம்’ என்று சொல்வதை அவனால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

மரத்திலிருந்த பறவைகளைப் பார்த்துக் கேட்டான். இதுதான் உலகமா?. அதற்கு பறவைகள், ”எத்தனையோ பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் நாங்கள் முட்டையிடுகிறோம். ஆனாலும், பாம்புகள் முட்டைகளை குடித்து விடுகின்றன. அதனால், இதுதான் உலகம்” என்று சொல்கின்றன.

அங்கு மேய்ந்து கொண்டு இருக்கும் கழுதைகளைப் பார்த்து கேட்கின்றான். ”நாங்கள் இளமையாக இருந்த காலத்தில் அதிகபடியான சுமைகளை சுமக்க செய்து, அடித்து, சக்கையாக வேலை வாங்குகிறார்கள். எங்களுக்கு வயதாகி, நடை தளர்ந்தவுடன், தீனி போட முடியாது என்று விரட்டிவிடுவதால், முதலை சொல்வது சரிதான்” என்கின்றன.

ஆடுகளை கேட்கிறான். ”எங்களுக்கு இரை போட்டு வளர்ப்பவர்களே, எங்களை இரையாக்கி கொள்வதால், முதலை சொல்வது சரிதான்” என ஆமோதிக்கின்றன.

கடைசியாக ஒரு முயலைப் பார்த்துக் கேட்கின்றான். “இதுவல்ல உலகம். முதலை பிதற்றுகிறது” என முயல் சொல்ல, முதலைக்கு கோபம் வந்துவிடுகிறது.

‘சிறு முயல் உனக்கு என்ன தெரியும்?’ என்று முதலை சொல்லவும்,

’நீ பேசுவது சரியாக புரியவில்லை, தெளிவாக பேசு’ என்கிறது முயல்.

காலை விட்டால் சிறுவன் ஓடிவிடுவான் என்ற முதலையைப் பார்த்து, முயல் பெரிதாக சிரித்தது.

உன் வாலை வைத்து அவனை அடித்து விடமுடியாதா? ஒரே அடியில் அவனை வீழ்த்திவிடமுடியும் உன்னால் என்றவுடன், கர்வத்துடன் காலை விட்டுவிட்டு, இதுதான் உலகம் என பேச துவங்கியது முதலை.

முயல் சிறுவனைப் பார்த்து ‘நிற்காதே! ஓடிவிடு’ என்கிறது.

சிறுவன் ஓடிவிடுகிறான். வாலால் அடித்து விடலாம் என நினைத்த முதலைக்கு ஏமாற்றமாகப் போய்விடுகிறது, வலையில் சிக்கியிருக்கும் வால் பகுதியை விடுவிப்பதற்குள் சிறுவனை பிடித்தது நினைவுக்கு வருகிறது.

கோபத்துடன் முயலைப் பார்க்க, ”புரிந்ததா? இதுதான் உலகம். இதுதான் வாழ்க்கை” என்கிறது முயல்.

தப்பி ஓடிய சிறுவன் கிராமத்தினரை அழைத்துவர, அவர்கள் முதலையை கொன்றுவிடுகின்றனர்.

சிறுவனோடு வந்த வளர்ப்பு நாய், புத்திசாலி முயலை பாய்ந்து பிடிக்கிறது. சிறுவன் காப்பாற்றுவதற்குள் முயலை நாய் கொன்றுவிடுகிறது.

உயிராக வளர்த்த நாய்தான் என்றாலும், உயிரைக் காப்பாற்றிய முயலை கொன்றுவிட்டதை; அவனால் சகித்துக் கொள்ளமுடியவில்லை.
கல்லெடுத்து எறிந்து நாயை விரட்டிவிடுகிறான்.

உதவி செய்தவர்களுக்கு உபத்திரவம் ஏற்படுவதும், நேசித்தவர்களையே வெறுக்க நேரிடுவதும்  அவனை குழப்பிவிடுகிறது.

இதுதான் உலகமா?
இதுதான் வாழ்க்கையா? என்ற கேள்விக்கு பதில் சொல்வார் யாருமில்லை!.

முன்னுக்குப்பின் முரணனானதாகவும், எதிரும் புதிருமான நிகழ்வுகள்தான் வாழ்க்கை!.

அடுத்த நொடிகளில் நடக்க இருப்பது, அதிர்ச்சிகளா? ஆச்சரியங்களா? என அறியமுடியாமல் இருப்பதுதான் வாழ்க்கையின் சுவராஸ்யம்.

வாழ்க்கையை புரிந்துகொள்ளமுடியாது. புரிய வைக்கவும் முடியாது. (எதிர் வருவதை) எது நடந்தாலும் ஏற்றுக்கொண்டு, முன்னேறுவதுதான் வாழ்க்கை  .........

Saturday, April 16, 2016

கொசுவை விரட்ட எளிய வழி

கொசுவை விரட்ட எளிய வழி  எலக்ட்ரிக்கல் கொசு விரட்டி கெமிக்கல் தீர்ந்த பின் அந்த பாட்டிலை திறந்து [திறக்க முடியும்]அதில் வேப்பெண்ணை 3பங்கு ,.தேங்காய் எண்ணை 1பங்கு என்ற விகிதத்தில் ,..  ஊற்றி உபயோகிக்கலாம் ,...ஆபத்து இல்லாத இந்த முறையை உபயோகித்து பாருங்கள் ,...பலன் தெரியும்,...இயலாதவர்கள் மாலையில் 5to7 இதே போன்ற கலவை எண்ணை மற்றும் ஒரு கற்பூர வில்லை யை  எண்ணையில் பொடித்து போட்டு விளக்கு ஏற்றுவது போல் விளக்கில் திரி போட்டு ஏற்றினாலும் கொசு வராது ...செய்து பாருங்கள் ......

Wednesday, March 16, 2016

முளை கட்டிய  தானிய உணவு :

முளை கட்டிய  தானிய உணவு :

ஒரு நாளைக்கு மூன்று வேளையும் முடியாவிட்டாலும் ஒரு வேளையாவது இயற்கை உணவை உட்கொண்டு வாருங்கள். அதன் பிறகு பாருங்கள் உங்கள் ஆரோக்கியத்தை.

பச்சைப்பயறு, கொண்டக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு மற்றும் கறுப்பு உளுந்து போன்ற தானியங்களை வீட்டிலேயே முளைக்கச் செய்து சாப்பிடுவதுதான் முளைதானிய உணவு எனப்படும் இயற்கை உணவாகும்.

இந்த தானியங்களை நன்றாக கழுவி 8 மணி நேரம் ஊற வைத்து பின் ஈரமான பருத்தி துணியில் சுற்றி வைத்து விட்டால் 8 – 10 மணிக்குள் தானியம் முளைவிட்டு இருக்கும். இந்த தானிய உணவானது ஆரோக்கியத்தையும் அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் மலிவான உன்னதமான உயிர் உணவு. இதன் பயனை உணர்ந்து கொண்டால் கட்டாயம் உங்கள் குடும்ப உணவாகவே மாறி விடும்.

இந்த உணவின் மூலம் புரதம், கால்சியம், சோடியம், இரும்புத்தாது, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவைகள் கூடுதலாக கிடைப்பதுடன் விட்டமின் ஏ, பி1 மற்றும் பி2 போன்றவையும் அபரிமிதமாக கிடைக்கிறது.

முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.

முளைவிட்ட கோதுமை சாப்பிட்டால் புற்றுநோய் மட்டுப்படும்.

முளைவிட்ட எள்ளு சாப்பிட்டால் ஒல்லியானவர்களுக்கு உடல் போடும் கண்பார்வை மேம்படும்.

முளைவிட்ட கொண்டக்கடலையை விளையாட்டு வீரர்கள் மற்றும் கடினமான உடல் உழைப்பாளிகள் அதிகம் சாப்பிடலாம். காரணம் தங்களது சக்தி குறையாமல் பார்த்துக் கொள்ளலாம்.

முளைவிட்ட கறுப்பு உளுந்து, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும்.

முளைவிட்ட கொள்ளு சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.. மூட்டுவலி தீரும்.

எந்தவித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும் இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு.

Friday, December 4, 2015

ஒரு வெங்காயம், ஒரு தக்காளி, ஒரு உருளைக்கிழங்கு

ஒரு ஊர்ல...
ஒரு வெங்காயம், ஒரு தக்காளி,
ஒரு உருளைக்கிழங்கு, இந்த மூணு பேரும் ரெம்ப திக் ஃப்ரெண்ட்ஸா இருந்தாங்க.
ஒரு நாள் அந்த மூணு பேரும், கடலுக்கு குளிக்க போனாங்க.

அப்போ, சொல்ல சொல்ல கேக்காம அந்த உருளைக்கிழங்கு, கடலுக்குள்ள ரெம்ப தூரம் உருண்டு போனதால மூழ்கி இறந்து போச்சு.
அதை கண்ட தக்காளியும், வெங்காயமும் பீச்சுல புரண்டு புரண்டு அழுதாங்க.
சோகம் தாங்காம இருவரும் வீட்டுக்கு கிளம்பினாங்க.

போற வழியில, வேகமா வந்த ஒரு தண்ணி லாரியில ஆக்ஸிடண்ட் ஆகி தக்காளி நசுங்கி செத்துப் போச்சு.
அதை பார்த்து வெக்ஸ் ஆன வெங்காயம், கதறி கதறி அழுதது.

தனியாகி போன வெங்காயம், அழுதுகிட்டே கடவுள் கிட்ட போயி, "உருளைக்கிழங்கு செத்தப்போ, நானும் தக்காளியும் அழுதோம்.
இப்ப தக்காளி செத்தப்போ, நான் மட்டும் அழுதேன். ஆனா நாளைக்கு நான் செத்தேன்னா, எனக்குன்னு அழ யாரு இருக்கா...?" ன்னு கேட்டு,
"ஓ..." ன்னு அழுதுச்சு.

அந்த வெங்காயம் அழுவதை பார்த்து தாங்கி கொள்ள முடியாத கடவுள், "சரி..., இனிமே நீ சாவும்போது யாரெல்லாம் பக்கத்துல இருக்காங்களோ, அவங்க எல்லாரும் அழுவாங்க" ன்னு சொல்லி அதுக்கு வரம் கொடுத்து அதை சமாதான படுத்தினாராம்.

(ஸோ..., இனிமே யாராச்சும், "வெங்காயம் நறுக்கும்போது, ஏன் கண்ணுல தண்ணி வருது" ன்னு கேட்டா, 'திருதிரு'ன்னு முழிக்காம, சோகமான இந்த திக் ஃப்ரெண்ட்ஸ் கதைய தெரியப்படுத்துங்க)